கொரோனாவுக்கு ஒருவர் பலி; மீண்டும் முகக்கவசத்தை கையில் எடுக்கும் கர்நாடகா

பெங்களுரு: கர்நாடகாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியான நிலையில், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. தொடக்கத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது இரட்டை இலக்கத்தை கடந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு ஆளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சித்தராமையாவுடன், சுகாதார அமைச்சர் சரண் பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. மூத்த குடிமக்கள். கர்ப்பிணிகள், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் சூழலில் மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு மீண்டும் செல்ல இருக்கின்றனர். அவர்களுக்கு சளி, தலைவலி, காய்ச்சல் என்று ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
கொரோனா பரிசோதனைகளுக்கான அனைத்து வசதிகளும் தயார்நிலையில் வைத்திருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.