மாற்றுப்பாதையில் அரசு பஸ் இயக்கம்: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

2

சென்னை: மாற்று வழியில் தன்னிச்சையாக அரசு பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



இதுபற்றிய விவரம் வருமாறு:


செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல், மாற்று வழித்தடத்தில் சென்றபோது வழியில் சுங்கச்சாவடி ஒன்றில் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.


சுங்க கட்டணத்தை செலுத்த பாஸ்டேக்கில் போதிய பணம் இல்லாததால் பஸ்சை சுங்கச்சாவடி ஊழியர்கள் சிறைபிடித்தனர். பின்னர் பயணி ஒருவர் சுங்கக்கட்டணத்தை செலுத்திய பின்னர் பஸ் விடுவிக்கப்பட்டது.


இந் நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமாக பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரையும் போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


இந்த நிகழ்வில் உள்ள TN 25-N-0740 என்ற பதிவு எண் கொண்ட பஸ் திருவண்ணாமலை 3 பணிமனையை சேர்ந்தது ஆகும். நேற்று, பஸ் செங்கத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும்போது வழக்கமான வழித்தடமான காஞ்சி வழியாக செல்லாமல் பாய்ச்சல் வழியாக சென்றுள்ளது. காஞ்சி வழியாக செல்லும்போது சுங்கச்சாவடி ஏதும் இல்லை.


பஸ்சின் டிரைவர் மற்றும் நடத்துனர் இருவரும் தன்னிச்சையாக பேருந்தை மாற்றுத்தடத்தில் இயக்கிச் சென்றதால் சுங்கச்சாவடி வழியாக செல்ல நேரிட்டது. அப்பொழுது fastag இல்லாத காரணத்தினால் பேருந்து சுங்கச்சாவடி வழியாக அனுமதிக்கப்படவில்லை.


ஓட்டுநர் இதனை உடனே பணிமனைக்கு தெரிவிக்காமல் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement