கன்டெய்னர் ரேஷன் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன

வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட்ட கன்டெய்னர் ரேஷன் கடைகள் பயன்பாட்டிற்கு வந்ததால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன்கார்டுதாரர்களுக்கு, 43 ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை நகரை தவிர பிற எஸ்டேட் பகுதிகளில் உள்ள, ரேஷன் கடைகள் அனைத்தையும் யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. இதனால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதுடன், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், மாதம் தோறும் திறந்தவெளியில் தான் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இரண்டு இடங்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. தற்போது, மேலும் நான்கு கன்டெய்னர் ரேஷன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம், வால்பாறை வந்த கலெக்டர் பவன்குமார் நான்கு கன்டெய்னர் ரேஷன் கடைகளையும், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொழிலாளர்கள் கூறுகையில், 'யானைகளிடம் இருந்து ரேஷன் கடைகளை பாதுகாக்க கன்டெய்னர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கன்டெய்னர் கடை முன்பாக மக்கள் காத்திருக்க வசதியாக மேற்க்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement