கால்வாயில் தண்ணீர் திடீர் நிறுத்தம்; ஷட்டர் கழன்றதால் நடவடிக்கை

உடுமலை; திருமூர்த்தி அணை சிறு புனல் மின் நிலையத்தின் ஷட்டர் கழன்று விழுந்ததால், பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டல பாசனம், நான்காம் சுற்றுக்கு, 23ம் தேதி இரவு, பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பின் போது, அணையில் அமைந்துள்ள, 650 கிலோவாட் உற்பத்தி திறனுடைய சிறு புனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இதற்காக அணையின் பிரதான ஷட்டரில் இருந்து, சிறு புனல் மின் நிலையத்துக்கான பை-பாஸ் கால்வாயில், தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் இருந்த ஷட்டர் கழன்று, தண்ணீருக்குள் விழுந்தது.

ஆழமான பகுதியாக இருந்ததால், ஷட்டரை எடுக்க முடியவில்லை. இதையடுத்து, அணையிலிருந்து பிரதான கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், ஷட்டரை கண்டறிந்து மீண்டும் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பணிகள் நிறைவு பெற்று, மீண்டும் நேற்று மாலை பாசனத்துக்கு அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

பிரதான கால்வாயில், திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டதால், பாசன விவசாயிகளிடையே நேற்று குழப்பம் நீடித்தது.

Advertisement