மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது 

பொள்ளாச்சி; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அடித்து கொலை செய்து புதைத்து, நாடகமாடிய வழக்கில் மேலும் மூன்றும் பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சோமனுாரைச்சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த், 22, மனநலம் பாதித்தவர். மூன்று மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, முல்லை நகரில் உள்ள, 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காப்பகத்தில் இருந்த வருண்காந்த், யாருடைய பேச்சையும் கேட்காததால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடித்து கொலை செய்யப்பட்ட அவரது சடலம், தமிழக -- கேரள எல்லையான நடுப்புணி, பி.நாகூரில் காப்பக உரிமையாளரின் தோட்டத்தில் இருந்து, தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. அதன்பேரில், காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜூவின் தந்தை செந்தில்பாபு, 'கேர் டேக்கர்' நித்திஷ், பணியாளர் ரங்கநாயகி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். காப்பக நிர்வாகிகள் கவிதா, லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கில், காப்பகத்தில் பணிபுரிந்த சதீஷ், 25, ஷீலா, 29, விஜயலட்சுமி, 30 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement