பதவிக்காலம் முடிந்தும் மாறாத பெயர் பலகை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில், ஊராட்சி பெயர் பலகையில் தலைவர் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

ஊராட்சிகளில் தலைவர் பதவி காலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதன்பின், தனி அலுவலர்களால் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சியில் உள்ள கிராமப்புற எல்லையோர பகுதியில், பெயர் பலகையில், ஊராட்சி பெயர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

தனி அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகத்தினை கவனித்து வருவதால், தற்போது அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள பெயர் பலகையில் அந்தந்த ஊராட்சி பெயருடன், தனி அலுவலர் என எழுதப்பட்டுள்ளது.

ஆனால், பொள்ளாச்சி பகுதியில் ஒரு சில ஊராட்சியில், எல்லையோர பெயர் பலகையில், முன்னாள் ஊராட்சி தலைவர் பெயர் மாற்றப்படாமல் உள்ளது. இதை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement