சிவில் வழக்கு சட்ட திருத்தம் ஜனாதிபதி முர்மு ஒப்புதல்

பெங்களூரு : ''சிவில் வழக்குகள் மீதான சட்டதிருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதால், சிவில் வழக்குகளில் உடனடியாக தீர்வு கிடைக்கும்,'' என, மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் சிவில் வழக்கு தொடர்வோர் எண்ணிக்கையும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சிவில் வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்குவது குறித்து சட்டதிருத்த மசோதா, கடந்த ஆண்டு டிசம்பரில், கர்நாடக சட்டசபை, மேல் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவர்னர் அனுப்பி வைத்திருந்தார்.
இதுகுறித்து நேற்று சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் நேற்று அளித்த பேட்டி:
நீதித்துறை அமைப்பு மேம்படுத்துவதற்காக சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் மாநில அளவில் செயல்படுத்தப்படும். இந்த சட்டதிருத்த மசோதாவிற்கு, கடந்த 19ம் தேதி ஜனாதிபதி கையெழுத்திட்டு, ஒப்புதல் அளித்துள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்கது.
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் செயல்பட உள்ளது. இதன் வாயிலாக சிவில் வழக்கு தொடர்பாக, இரு தரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்து, சமரசம் செய்யும் முயற்சிகள் கட்டாயம் நடக்கும்.
இதற்கு இரண்டு மாத அவகாசம் அளிக்கப்படும். இதிலும், இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை என்றால், வழக்கம் போல நீதிமன்றத்தில் முறையிடலாம்.
இந்த வழக்குகளும் 24 மாதங்களுக்குள் தீர்க்கப்பட்டு நீதி வழங்கப்படும். இதனால், நீதி கிடைப்பதில் தாமதம் தவிர்க்கப்படும். இந்த சட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.