கடிவாளம் போடுங்க . ராமநாதபுரத்தில் ரோட்டில் திரியும் கால்நடைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட புனித ஆன்மிக தலங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தற்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகர், புறநகர் உட்புற சாலைகளில் ஆடு, மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டில் கண்டபடி திரிகின்றன. வீடுகளில் வளர்க்க வேண்டிய மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்குள் அவிழ்த்து விடுகின்றனர்.

குறிப்பாக ராமேஸ்வரம்- மதுரை ரோடு பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் நகர் ரோடுகளில் பகல், இரவு என நேரம் காலமின்றி கால்நடைகள் உலா வருகின்றன. இவை நடுரோட்டில் வரும் போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றன.

தெருநாய்களின் தொந்தரவைவிட தற்போது கால்நடைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கால்நடைகளை தெரு, சாலைகளில் விடுவதை தவிர்க்க வேண்டும்.

மீறினால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலையில் திரியும் கால் நடைகளை பறிமுதல் செய்து ஏலமிட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவிக்கின்றனர்.

ஆனால் அதிகாரிகளின் பெயரளவு நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் எவ்வித அச்சமின்றி தொடர்ந்து கால்நடைகளை ரோட்டில் விடுவது வாடிக்கையாகியுள்ளது. இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், கால்நடைகளும் விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.

கால்நடைகளால் ஆண்டுதோறும் 30க்கு மேற்பட்ட விபத்துகள் நடக்கிறது. எனவே ரோட்டில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யவும், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement