கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புது கட்டடம் கட்ட 'டெண்டர்'

செங்கல்பட்டு:முகுந்தகிரி, மொறப்பாக்கம் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் முகுந்தகிரி, மொறப்பாக்கம் ஆகிய கிராமங்களில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இங்கு விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கடன் சங்கங்களுக்காக, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கூட்டுறவுத் துறைக்கு, விவசாயிகள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, கூட்டுறவு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதியில் முகுந்தகிரி, மொறப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கடந்த மாதம் அறிவித்தார்.

அதன் பின், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, புதிய கட்டடம் கட்ட 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement