மத்திய அரசை புகழும் சசி தரூர்: அதிருப்தியில் காங்கிரஸ்

23


புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து விவரிக்க பனாமா நாட்டிற்கு சென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர், அங்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டி பேசியுள்ளது, காங்கிரஸ் மேலிடத்தை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், ' ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றுள்ளார். அவர் பனாமா நாட்டில் நிருபர்களிடம் கூறுகையில், ' பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கண்ணோட்டம் மாறிவிட்டது. பயங்கரவாதிகளும் இந்தியாவை பார்த்து பயப்பட துவங்கிவிட்டனர். பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர்களும் உணரத்துவங்கிவிட்டனர். இதில் சந்தேகம் வேண்டாம். முதல்முறையாக, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி சென்ற இந்தியா, 2015 ம் ஆண்டு உரி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு முன்னர் அப்படி நடந்தது இல்லை.

கார்கில் போரின் போது கூட அப்படி செய்யவில்லை. உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அதனை செய்தோம். 2019 புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மட்டுமல்லாமல், சர்வதேச எல்லையை தாண்டி, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினோம். இந்த முறை இந்த இரண்டு பகுதிகளையும் தாண்டி சென்று பாகிஸ்தானின் இதயப்பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், அதன் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினோம் ' எனக்கூறினார்.

சசி தரூர் இவ்வாறு தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக பேசுவது காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, ' சசி தரூர் பேசுவது எல்லாம் கட்சியின் கருத்து அல்ல,' எனக்கூறினார்.

அதேபோல் மற்றொரு தலைவரான பவன்கெரா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சர்ஜிக்கல் தாக்குதல் நடந்தது என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, சசிதரூரின் பார்வைக்கு எனக் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் சசிதரூரின் பேட்டியில் காங்கிரஸ் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை காட்டுகிறது.

Advertisement