தெரு நாய்க்கு கருத்தடை செய்ய 200 டாக்டர்கள் அவசர நியமனம்

4

சென்னை: 'தமிழகம் முழுதும், தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, 200 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகியபடி உள்ளது. அவை மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன.

எனவே, தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கும்படி, பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை இணைந்து, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகின்றன.

நாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்க, அவற்றுக்கு கருத்தடை செய்வதற்கு, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 200 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுதும், கால்நடை மருத்துவமனைகளில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். அத்துடன், அவற்றுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணி ஜூன் முதல் வாரத்தில், தமிழகம் முழுதும் துவக்கப்பட உள்ளது.

Advertisement