இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் வாய்ப்பு: தமிழகத்தின் 40 ஆண்டு ஏக்கம்

நமது நிருபர்: இந்திய பெண்கள் ஹாக்கி அணியில், தமிழக வீராங்கனைகள் இடம் பெற்று, 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்திய பெண்கள் அணி 2023, 2024ல், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வென்றது. உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது. இப்படி சாதனைகள் படைத்து வரும், இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த ஒரு வீராங்கனை கூட 40 ஆண்டுகளாக இடம் பெறவில்லை. இந்திய அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வானாலும், அணியில் இடம் பெற முடியவில்லை. இது இந்திய அணியில் விளையாடும் திறமை, தமிழக பெண்களுக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


இதுகுறித்து, ஹாக்கி வீராங்கனைகள் சிலர் கூறியது: தமிழகத்தில் போதிய ஹாக்கி விளையாட்டு மைதானங்கள் இல்லை. அதனால், ஹாக்கி ஆசை இருந்தும், பலர் விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது. ஹரியானா, ஜார்க்கண்ட்டில் செயற்கை புல் மைதானங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாக, பல சர்வதேச வீராங்கனையர் உருவாகி வருகின்றனர். இதேபோல தமிழகத்திலும், மாவட்டத்திற்கு ஒரு செயற்கை புல் ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டால், பல ஹாக்கி வீராங்கனையர் உருவாகுவர். தமிழக வீராங்கனையர், குடும்ப சூழ்நிலையால் ஹாக்கியை விட்டு செல்வதாலும், இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.

எனினும், தமிழகத்தை சேர்ந்த காயத்ரி, சர்வதேச போட்டியில் ஹாக்கி வீடியோ ஆய்வாளராக உள்ளார். பல தேசிய போட்டியில் நடுவராக, தமிழகத்தை சேர்ந்த கிளாடி, சோனியா, ஆக்னஸ், ஹரிபிரியா, காவியா பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், 30க்கும் அதிகமான ஹாக்கி வீராங்கனையர் உள்ளனர். அவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்கள் இல்லை. இப்பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், தமிழக வீராங்கனைகள் அதிக அளவில் இந்திய அணியில் இடம் பெறலாம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement