அடரி ஏரியில் மணல் கடத்திய 7 பேர் கைது

கடலுார்: அடரி நடு ஏரியில் இருந்து நள்ளிரவில் டிராக்டரில் மணல் கடத்திய ஏழு பேரை கைது செய்து, டிராக்டர்கள், ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த அடரி நடு ஏரியில் திருட்டு மணல் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை எஸ்.ஐ., ராஜா தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அடரி பகுதியில் மணல் கடத்தி சென்ற ஆறு டிராக்டர்களை மடக்கிப்பிடித்தனர். மேலும் மணல் கடத்திய வேப்பூர் அடுத்த பொயனப்பாடி குப்புசாமி 45; கருப்புசாமி 33; ரெட்டாக்குறிச்சி சண்முகம் மகன் சரவணன் 20; காஞ்சிராங்குளம் வேல்முருகன் 43; பொயனப்பாடி மகாதேவன் 30; அடரி மாதேஷ் 28; சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த துலக்கனுார் மருதமலை மகன் மணிகண்டன் 19; ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்த பயன்படுத்திய 6 டிராக்டர்கள், ஒரு ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement