நீங்களே பாருங்க, அடுத்த வருடம்... மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

72


சென்னை: 'உங்களின் வீட்டில் இருப்பவர்களை ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்வு செய்யுங்கள்' என்று மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் த.வெ.க., தலைவர் விஜய் பேசியுள்ளார்.



தமிழகம், புதுச்சேரியில் உள்ள 16 மாவட்டங்களில் சுமார் 88 தொகுதிகளைச் சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.



முன்னதாக அவர் பேசியதாவது;


படிப்பும் சாதனை தான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட படிப்பில் மட்டுமே சாதிக்க வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்து அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை.


நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப, ரொம்ப பெரியது. எனவே உங்கள் மனதை ஜனநாயகமாக வைத்து கொள்ளுங்கள். ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால் தான், இந்த உலகில் உள்ள அனைத்து துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும்.


முறையான ஜனநாயகம் இருந்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கும். எனவே, உங்களின் வீட்டில் இருப்பவர்களை ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்க.


இதுவரை ஊழலே செய்யாதவர்களை பார்த்து தேர்வு செய்யுங்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்திடலாம் என்ற கலாசாரத்தை ஆதரிக்காதீர்கள். காசு வாங்காதீங்க. உங்கள் பெற்றோர்களிடமும் எடுத்துச் சொல்லுங்க. நீங்களே பாருங்க அடுத்த வருடம் வண்டி, வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்க. என்ன பண்ண வேண்டும் என்று உங்களுக்கு நல்லா தெரியும்.


பெற்றோர்களுக்கு சின்ன வேண்டுகோள், உங்கள் குழந்தைகள் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களை சுதந்திரமாக விடுங்கள். அவங்க அவங்களுக்கு பிடித்த துறையில் அவர்கள் நிச்சயமாக சாதித்து காட்டுவார்கள்.


ஜாதி, மதம் வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கமே போயிடாதீங்க. விவசாயிகள் என்ன ஜாதி, மதம் பார்த்தா விளை பொருட்களை விளைவிக்கிறார்கள். மழை, வெயிலில் ஜாதி, மதம் இருக்கறதா? எப்படி, போதைப் பொருட்களை ஒதுக்கி வைத்தீர்களோ, அதே போல ஜாதி, மதத்தை தூரமா ஒதுக்கி வைப்பது அனைவருக்கும் நல்லது.



ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போன்ற கேள்வி கேட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எதுவாக இருந்தாலும் அறிவியல் பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும். ஏ.ஐ., தான் இந்த உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement