பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தம்: உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பு

கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், ரூ. 10 கோடி மதிப்பில், மேம்படுத்தும் பணிக்காக அடித்தளம் அமைக்க (பைல்) பணிகள் துவங்கிய நிலையில் கடந்த மூன்று மாதமாக எந்த பணியும் நடக்காமல் கிடப்பில்போடப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்தமையம் சிறப்பு வாய்ந்தது. இதனால், இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறன்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, ரூ. 10 கோடி மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் இங்கு, நடைபெற உள்ளது.
குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம் பார்வையாளர் கோபுரம், நடைப்பாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இப்பணிக்காக கடந்த மார்ச் மாத்தில், அடித்தளம் அமைப்பதற்காக (பைல்) போடும் பணி நடந்தது. அதன் பிறகு எந்த பணியும் நடைப்பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பணிகள் நடைப்பெறாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாமலும், சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலா மைய மேம்படுத்தும் பணி கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு துவங்கியது. ஒரு பகுதியில் கார் பார்க்கிங் வசதி மட்டும் செய்யப்பட்டது. மற்ற பணிகள் துவக்கப்படாமல் அப்படியேயுள்ளது. கடந்த மார்ச் மாதம் மீண்டும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பிச்சாவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தப்பிறகு அடித்தளம் அமைக்க (பைல்) போடப்பட்டதோடு சரி மற்ற பணிகள் துவக்கப்படாமல் அப்படியே உள்ளது.
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேம்பாட்டுப்பணிகளை துவங்கி விரைந்து முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் கோரிக்கையாக உள்ளது.