பல்கலைகழக நிர்வாக அலுவலகம் முற்றுகை: தனி அதிகாரிகள் கைது

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில், கோரிக்கை வலியுறுத்தி முற்றுகையிட்ட தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இதில் பணி நிரவல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பல்கலைக்கழகத்தில் 491 தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நீதிமன்ற தீர்ப்பின்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருடாந்திர ஊதிய உயர்வை வழங்க வேண்டும், 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 21ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு கமிட்டி உறுப்பினர் அருட்செல்வி, பதிவாளர் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து பேசினர். அதில், கோரிக்கை அமல்படுத்த வில்லை என்றால்,. 27 முதல் காலவறையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பல்கலைக்கழக வளாக நிர்வாக அலுவலகம் அருகே 100 க்கும் மேற்பட்ட தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் திரண்டனர். அதனை தொடர்ந்து, பல்கலை பதிவாளரை, முக்கிய நிர்வாகிகள் சந்தித்து, நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தினர். எந்த ஒரு முடிவும் எட்டாத நிலையில், அனைவரும் வளாகத்திலேயே அமர்ந்து முற்றுகையிட்டு, கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 108 பேரை, டி.எஸ்.பி., லாமேக் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பல்கலைகழக வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement