கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்

கடலுார்: கரும்பு வெட்டும் கொத்தடிமை வேலையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூரக்குப்பம் கூலித்தொழிலாளி எஸ்.பி., ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து கூலித்தொழிலாளி பாவாடை, எஸ்.பி., ஜெயக்குமாரிடம் அளித்த புகார் மனுவில்;

பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் வள்ளலார் காலனியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் பாவாடை 45; விவசாய கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த சன்னியாசி மகன் அருள். இவர் கரும்பு வெட்டித் தரும் கங்கானி தொழில் செய்கிறார். கடந்த 2019ம் ஆண்டு அருள் தனது குழுவில் கரும்பு வெட்டும் தொழிலாளி பாவாடைக்கு முன் பணமாக ரூ.2,00,000 கொடுத்துள்ளார்.

முன் பணம் வாங்கியுள்ளதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பாவாடையும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியுடன் கொத்தடிமையாக அவர் அழைத்து செல்லும் ஊர்களுக்கு சென்று கரும்பு வெட்டும் தொழில் செய்தோம். இருவரும் செய்த வேலைக்கு கூலித்தருவது இல்லை. வேலை செய்த கூலி கேட்டால் நீ தான் எனக்கு ரூ.3,15,000 பாக்கி பணம் தர வேண்டும் என ஆபாசமாக திட்டி மிரட்டுகிறார். . அதனால் இருவரும் ஐந்து ஆண்டுகள் கரும்பு வெட்டும் வேலை செய்த கணக்கை பார்த்து, அருளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,00,000 தொகை போக, வேலை செய்த கூலியை பெற்றுக்கொடுத்து, அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement