பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய ராணுவ ரகசியங்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிப்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர். யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பலர் கைதாகி உள்ள நிலையில், தற்போது ராஜஸ்தானின் காங்கிரஸ் மாஜி அமைச்சர் ஷாலே முகமதுவின் முன்னாள் உதவியாளர் ஷாகுர் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஷாகுர் கான், இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்துள்ளார்.
உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் ஷாகுர் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனை ஆய்வு செய்ததில், சில பாகிஸ்தானியர்களுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இஸ்லாமாபாத்துக்கு 6 அல்லது 7 முறை சென்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகள், தொடர்ந்து ஷாகுர் கானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ஹிமாச்சல பிரதேசத்தில் காங்ரா பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் அபிஷேக் பரத்வாஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




