வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி


கேங்டாக்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிவேகமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி இன்று முதல் இரண்டு நாள் பயணமாக 4 மாநிலங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக, கேங்டாக் செல்ல முடியாமல் போனது.


எனவே, மேற்கு வங்க மாநிலம் பக்தோக்ராவில் இருந்தபடி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம், சிக்கிம் 50ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, சிக்கிமின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.


அவர் பேசியதாவது; கடந்த 10 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் வடகிழக்கு மாநில முதலீட்டாளர் மாநாடு டில்லியில் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற முதலீட்டாளர்கள், சிக்கிம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகும்.


விளையாட்டில் இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை நோக்கி வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற வேண்டும். சிக்கிம் விவசாயிகள் தற்போது டிரெண்டுக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இயற்கையான விவசாயத்தை சிக்கிம் விவசாயிகளிடையே ஊக்குவிக்க, நாட்டின் முதல் இயற்கை மீன் வளர்ப்பு இடத்தொகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்கிம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.


முன்னதாக, நம்ச்சி ரூ.750 கோடி மதிப்பிலான மாவட்ட மருத்துவமனை, சங்காசோலிங் பயணிகள் ரோப்வே உள்பட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து, மேற்குவங்கத்தில் இன்று மதியம் நடக்கும் நிகழ்ச்சியில், 2.5 லட்சம் குடும்பங்கள் பயனடையும் விதமாக, ரூ.1,010 கோடி மதிப்பிலான கேஸ் விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பீகாரில் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

Advertisement