அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் கைவிரிப்பு

2

மதுரை: அரசு பள்ளி ஆங்கில வழி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உட்பட அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆங்கில வழி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு உட்பட 21 இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், உதவிபெறும் பள்ளிகளுக்கும் பெரும்பாலான நலத்திட்டங்கள் கிடைக்கின்றன.

சிறப்பு ஒதுக்கீடு



'நீட்' தேர்வுக்கான பயிற்சிக்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.

மருத்துவ படிப்புகளுக்கான, 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு அரசு மாணவர்களுக்கு உள்ளது போல, 2.5 சதவீதம் தனி ஒதுக்கீடு, உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்க தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இதுபோல அரசு, உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் அப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகம் உட்பட நலத்திட்டங்கள் வழங்கப்படும் நிலையில், உதவி பெறும் பள்ளிகளில் சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதில் பாரபட்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் நிர்ணயத்திலும் இப்பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால், உபரி ஆசிரியர் பிரச்னையால் உதவிபெறும் பள்ளிகள் பாதிக்கின்றன.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனபால் ஜெயராஜ் கூறியதாவது:

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான அரசாணை 148ல் ஆங்கில வழி மாணவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். 2019 - 2020 வரை நடைமுறையில் இருந்தது. சில உதவி பெறும் பள்ளிகளில் 2019க்கு முன் துவங்கப்பட்ட ஆங்கில வழி வகுப்புகளுக்கு மட்டும் இன்னும் நலத்திட்டங்கள் கிடைக்கின்றன.

நடவடிக்கை



இதனால், ஒரே பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைத்தும், சிலருக்கு கிடைக்காத சூழ்நிலையும் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், 'ஆடிட் அப்ஜெக் ஷன்' உட்பட சில காரணங்களை கூறுகின்றனர்.

இந்தாண்டாவது உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து மாணவருக்கும் நலத்திட்டங்கள் கிடைக்கவும், ஆசிரியர் - மாணவர் நிர்ணயத்தில் ஆங்கில வழி மாணவர்களையும் கணக்கில்கொள்ளவும் அரசு நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement