பிரதமரின் உதவித்தொகை; 2 லட்சம் விவசாயிகள் ஏக்கம்

சென்னை: பிரதமரின் விவசாய உதவித்தொகை பெறுவதற்கு, தமிழகத்தில் தகுதியுள்ள 2 லட்சம் விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், பிரதமரின் விவசாய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், மூன்று தவணைகளாக தலா, 2,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில், 41 லட்சம் பேருக்கு விவசாய உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது பணியில் இருந்த வேளாண் துறை அதிகாரிகள், அரசு இ - சேவை மைய ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சில அதிகாரிகள், அரசியல் செல்வாக்கால் தப்பி, அதே துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

உதவித்தொகை பெற்ற விவசாயிகள் அல்லாதோரிடம் இருந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் விவசாய உதவித்தொகை பெற்ற பயனாளிகள் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. முறையான ஆவணங்கள் வைத்துள்ள 22.6 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, பிப்ரவரி மாதம் 19வது தவணை உதவித்தொகை இவர்களுக்கு விடுவிக்கப்பட்டது. ஆனால், 22.5 லட்சம் பேர் மட்டுமே உதவித்தொகை பெற்றனர்.

இந்நிலையில், 20வது தவணை உதவித்தொகையை ஜூன் மாதம் விடுவிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இத்திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு, மேலும் 2 லட்சம் விவசாயிகள் தகுதியுள்ளவர்களாக இருந்தும், அவர்களுக்கு கிடைக்கவில்லை. இணையதளத்தில் பதிவு செய்து, 2 லட்சம் விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Advertisement