நாங்க மறு கன்னத்தை காட்ட மாட்டோம்; பனாமாவில் சசிதரூர் பேச்சு

3


பனாமா சிட்டி: நாங்கள் மறு கன்னத்தை காட்ட மாட்டோம் என்று மத்திய அரசு சார்பில் பனாமா சென்றுள்ள காங்., எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.


சசி தரூர் தலைமையில் பா.ஜ., தெலுங்கு தேசம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் குழு, அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளுக்கு சென்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கி வருகிறது.


பனாமாவில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; சுதந்திர போராட்டத்தின் போது, மகாத்மா காந்தியின் தைரியமான தலைமையின் மூலம், நமது உரிமைக்காக எப்போதும் நிற்க வேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். கொள்கையுடன் போராட வேண்டும். பயமின்றி வாழ வேண்டும். பயத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும். உலகத்தால் பயங்கரவாதிகள் என்ற அழைக்கப்படும் தீயசக்திகள், நமது நாட்டிற்குள் நுழைந்து மக்களை கொன்று, அரசியல் மற்றும் மத பிரச்னைகளை தூண்ட நினைக்கின்றனர்.


சுயமரியாதை உள்ள எந்த நாடும் இதனை விட்டுக்கொடுக்காது. மகாத்மா காந்தியின் இந்த மண், மறு கன்னத்தை காட்டாது. தக்க பதிலடி கொடுப்போம், எனக் கூறினார்.


முன்னதாக, பனாமா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவீர் மர்ட்டினுசுடன், சசி தரூர் தலைமையிலான மத்திய அரசு குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பனோமா அரசு, இந்தியாவுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement