கேரளா முழுவதும் மஞ்சள் அலர்ட்: விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் கனமழை எதிரொலியாக, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.



தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக முன் கூட்டியே பெய்யத் தொடங்கி உள்ளது. வயநாடு, கோழிக்கோடு,கொல்லம், பத்தனம்திட்டா என பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. மிக அதிக கனமழை காரணமாக காசர்கோடில் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவுக்கு குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.


கனமழை மேலும் நீடித்து வருவதால் கேரள மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பல்வேறு மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.


மலன்கரா அணையின் மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தொடுபுழா, முவாட்டுபுழா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். விழிஞ்சத்தில் காணாமல் போன 8 மீனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


எர்ணாகுளம், காசர்கோடு, இடுக்கி, திருச்சூர் என பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மழை தொடர்ந்து கொட்டி வரும் சூழலில் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்.


அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மொத்தம் 4 குழுக்களாக கேரளா சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் உள்ளனர். 4 குழுக்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 120 வீரர்கள் சாலை மார்க்கமாக கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.

Advertisement