துார் வாரப்படாத ஓடைகள் நீரோட்டம் பாதிக்கும் அபாயம்

திருவாலங்காடு:பருவமழைக்கு முன் கிராம ஓடைகளை பராமரிக்க, எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காததால், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேகரிக்க முடிவதில்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர்.

பருவமழை காலங்களில் பெய்து வரும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஓடைகள், குளங்கள், குட்டைகள் போன்றவை முன்னோர்களால் உருவாக்கப்பட்டன. இதன் வாயிலாக, விவசாயத்திற்கு தேவையான நீரும், குடிநீர் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளில், 55க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன. சின்னம்மாபேட்டை, பழையனுார், தொழுதாவூர், அரிசந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓடைகள் உள்ளன.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் மட்டும், இந்த ஓடைகளில் நீரோட்டம் இருக்கும். இதனால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மழைநீர் ஓடைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது, பெரும்பாலான ஓடைகளில் மழைநீர் செல்ல வழியில்லாத அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன. குளங்களுக்கும் நீர்வரத்து கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தி, ஓடையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, கரைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement