'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. 'அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள், 'சிப்காட்' அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' துவங்கப்பட்டு, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தொடர் காத்திருப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை அழித்து, 'சிப்காட்'டிற்கு நிலம் கையகப்படுத்துவது, 80க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை தரிசு என்றும், தற்காலிக தரிசு என்றும் வகை மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நீர் நிலைகளை மறைத்து அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பதை கண்டித்தும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நடந்தது.
'சிப்காட்' எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமை வகித்தார். இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். 'சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், பழனிவேல், நிர்வாகிகள், உறுப்பினர்கள், விசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement