கிராமிய நிகழ்ச்சியில் வேளாண் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் வட்டாரத்தில், அணியார் கிராம வாரச்சந்தை மற்றும் நாமக்கல் உழவர் சந்தையில், வேளாண் துறை மூலம் செயல்பட்டு வரும் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், 'கலாஜாதா' என்னும் கலைநிகழ்ச்சி மூலம், வேளாண் சார்ந்த தொழில்நுட்ப தகவல் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்தார். தொடர்ந்து, பாண்டமங்கலம் பாக்கியலட்சுமியின், 'கலையருவி' கிராமிய கலைக்குழு மற்றும் ஸ்டாலின் ராஜாவின், நாமக்கல் பாரதி கிராமிய கலைக்குழு சார்பில், 'கலாஜாதா' என்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
அதில், அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொழில் நுட்ப பயிற்சி, விவசாயிகள் கண்டுணர்வு பயணம், செயல்விளக்க திடல் அமைத்தல், பண்ணைப்பள்ளி மூலம் விதை முதல், அறுவடை வரை மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் நுட்ப தகவல்களை விளக்கினர்.

மேலும், வேளாண் துறையின் மானிய திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து நாடகம், பாடல்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம் விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement