ஆனைமலை புலிகள் காப்பகத்தில்  இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான்

வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்தில், இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் 'பயோலுமினசென்ட்' என்ற வகை காளான்கள் கண்டறியப்பட்டன.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை அருகே, மானாம்பள்ளி வனச்சரகத்தில், அரிய வகை பறவைகள், தாவரங்கள், வனவிலங்குகள் உள்ளன. இயற்கை வளம் நிறைந்த மானாம்பள்ளி வனச்சரகம், உருளிக்கல் வனப்பகுதியில் 'பயோலுமினசென்ட்' என்ற இரவில் ஒளிரும் காளான்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மிதமான தட்பவெப்பத்தில் வளரும் இந்த வகை காளான்கள், இரவு நேரத்தில் பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை கொண்டவை. இதனை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாஹூ, தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறியதாவது:

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில், அரிய வகை தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக, காளான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில், 125 வகையான காளான்கள் உள்ளன.

இதில், உருளிக்கல் - மானாம்பள்ளி வனத்தில், 'பயோலுமினசென்ட்' என்ற அரிய வகை காளான்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை காளான், இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, போன்ற நாடுகளிலும் இந்த வகை காளான்களை காணமுடியும். இந்த காளான்கள் உயிருள்ள வரை இரவு நேரத்தில் ஒளிரும் தன்மை கொண்டவை. விஷத்தன்மை அற்றவை.

இது தவிர, வால்பாறை வனப்பகுதியில் நாய்க்குடை காளான், முட்டைக்காளான்,சிப்பி காளான், பூஞ்சை காளான், பட்டன்காளான், பீச் காளான் வகைகள் வனப்பகுதியிலும், பாறை இடுக்குகளிலும் காணமுடியும். உலகின் அரிய வகை தாவரங்கள், பறவைகள், வன விலங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு, கூறினார்.

Advertisement