அதிகாலை வாகன பயணத்தில் சோகம்: கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி

1

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


பட்டியானின் என்ற கிராமத்தில் நிகழ்ந்த திருமணத்திற்கு சென்றுவிட்டு பாலி என்ற கிராமம் நோக்கி கார் ஒன்றில் ஒரு குடும்பத்தினர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று (மே 31)அதிகாலை 3 மணி அளவில் மஜ்ஹிலால் போலீஸ் ஸ்டேஷன் அருகில் புப்பா பூர்வா என்ற பகுதியில் அவர்கள் வந்த கார் ஒரு வளைவில் திரும்பியது.


அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தை அறிந்தவுடன் அருகில் உள்ள போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.


அங்கு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 11 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். எஞ்சிய 6 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது குறித்து காவல்துறை அதிகாரி அனுஜ் மிஸ்ரா கூறுகையில், ஆலம்நகர் சாலையில் அதிவேகமாக வந்த கார் வளைவில் திரும்பும் போது விபத்து நிகழ்ந்துள்ளது. 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியாகிவிட்டனர். அவர்கள் ஜிதேந்திரா(22), ஆகாஷ்(18), சித்தார்த்(6), ராமு(35), ஜாஹீரி(40) என்பது தெரிய வந்துள்ளது என்றார்.

நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது, வினாடி நேரம் அசந்தாலும் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement