நான் உயிரோடு இருக்கக் கூடாது; மனமுடைந்து ராமதாஸிடம் குமுறிய ஜி.கே.மணி

13


சென்னை: "45 ஆண்டுகள் உழைத்து கொண்டிருக்கும் நான், எங்கள் கட்சியை சிதைக்க வேண்டும் என்று நினைப்பேனா? யார் சொல்லியும் கட்சியில் பிளவு இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம்", என்று பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


பா.ம.க.,வில் ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தான் என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, அந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


மேலும், அவர் பேசியதாவது; நான் அடக்கத்தோடு இருந்து வருகிறேன். அரசியலில் இருப்பவர்கள் தன்னைப் பற்றி பந்தா பண்ணிக் கொள்வது இயல்பு. நான் அப்படி எல்லாம் இருக்கக் கூடாது. அடக்கமாக இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
உயிர் போகும் வரைக்கு சரியாக வாழ்ந்து விட்டு போனார் என்று மனசாட்சி சொல்ல வேண்டும். அப்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் என்னை பற்றி அவதூறு படுத்துவது நல்லது அல்ல. என்னை அவதூறு படுத்துவதால் அவர்களுக்கு சந்தோஷம் என்றால், மகிழ்ச்சி தான்.


மருத்துவர் ஐயாவும், அன்புமணியும் விரைவில் சந்திக்க வேண்டும் என்றும் என்பது தான் எங்களின் இயக்கத்தினரின் ஆசை. அப்படி சந்தித்து விட்டால், எங்களின் இயக்கம் வீறு கொண்டு எழும். இது ஒரு சோதனைக் காலம். அதில் இருந்து மீண்டு விட்டால் அது வேகமாகத் தான் வளரும்.


பொறுப்பாளர்களை மாற்றவே கூடாது என்று ராமதாஸிடம் மிகவும் வலியுறுத்தி வருகிறேன். ஒரு நெருக்கடியான சூழல் எங்கள் கட்சியில் உருவாகியுள்ளது. அதை சரி செய்ய முயன்று வருகிறோம். 45 ஆண்டுகள் உழைத்து கொண்டிருக்கும் ஜி.கே.மணி, எங்கள் கட்சி சிதைய வேண்டும் என்று நினைப்பேனா?


சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன. எப்படி, மனசாட்சி இல்லாமல் இப்படி எழுதுகிறார்கள். ரூமில் அமர்ந்து கண்ணீர் வடிக்கிறேன். பொருளாளர் திலகபாமா பற்றி நான் எந்த குறையும் சொல்லவில்லை. அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டாம் என்று நேற்று வரையில் ராமதாஸிடம் கூறினேன்.


ஐயா, ராமதாஸ் மனஉளைச்சல், வேதனையை எல்லாம் என்னிடம் கொட்டுகிறார். இருந்தாலும் சகித்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். காலையில் ரொம்ப முக்கியமானவர்களிடம் இருந்து எனக்கு போன் வந்தது. மணி சார் உங்கள் மீது ரொம்ப கல்லடி படுகிறது. எப்படி சார் தாங்குகிறீர்கள். காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்றனர். அதற்கு, ரொம்ப கல்லடி பட்டால் மரம் உதிர்ந்து போய் விடும் என்றேன்.


ராமதாஸிடம் பலமுறை சொல்லி விட்டேன். எனக்கு இருக்கும் வேதனை, மன உளைச்சலை உங்களிடம் குமுறுகிறேன் என்றேன். கோபப்படாதீங்க என்று கோபமாகவும் சொன்னேன்.
ஒன்று, உங்களுக்கும், எனது குடும்பத்திற்கும், நாட்டுக்கும் யாருக்கும் தெரியாமல், எங்கயாவது சென்று விட வேண்டும். இல்லையெனில், நான் உயிரோடு இருக்கக் கூடாது. இந்த இரண்டு தான் முடிவு என்றேன். எவ்வளவு வேதனை இருந்தால், நான் இப்படி சொல்வேன்.


நான் சொன்னதை வாபஸ் வாங்குங்கள் என்று ஐயா கூறினார். நான் வாபஸ் வாங்க மாட்டேன். நீங்கள் சரியாகுங்கள் என்று கூறினேன். இந்தப் பிரச்னைக்கு ஜி.கே.மணியோ, மற்றவங்களோ, இன்னொரு கட்சியோ காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. யார் சொல்லியும் கட்சியில் பிளவு இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை. தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement