நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு போலீசிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்; சின்ன கோட்டக்குப்பத்தில் பரபரப்பு

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே நீதிமன்ற உத்தரவுபடி நிலம் அளக்க வந்த அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது பேரன் அனிஸ். இவர் சின்ன கோட்டக்குப்பத்தில் இருந்து பழைய ஆரோவில் பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் ஒரு ஏக்கர் 36 சென்ட் அளவுள்ள இடத்திற்கு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வானுார் தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் நேற்று காலை 11;00 மணிக்கு, வானுார் சர்வேயர் அருள்ராஜ், கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சுந்தர் ஆகியோர் கோட்டக்குப்பம் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

இதையறிந்த, சின்ன கோட்டக்குப்பம் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொது மக்கள் அங்கு திரண்டனர். இடத்தை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, நீர் நிலை குட்டையாக இருந்து வருகிறது என்றும், இடத்தை அளக்கக்கூடாது என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த வானுார் தாசில்தார் வித்யாதரன், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடத்தை உரிமை கோரிய அனிஸ் அங்கு வந்து அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

தனக்கு இடம் சொந்தமானது என அனிஸ் கூறும் போது, அங்கிருந்தவர்கள் போலீசார் முன்னிலையில் அனிஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அனிசை பாதுகாப்பாக வேனில் ஏற்றிக்கொண்டு, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன், இடம் அளவீடு செய்யப்பட்டது.

போலீஸ் பொதுமக்கள் வாக்குவாதத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப் பதிவு



அதிகாரிகள் முன்னிலையில் தாக்குதலுக்கு ஆளான அனிஸ், கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், தனசெழியன், கணபதி, கார்த்திக், தனுஷ், கவியரசன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement