பகிங்ஹாமில் எண்ணை படலம் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

திருவொற்றியூர்:திருவொற்றியூரில் குப்பைமேடு முதல் எண்ணுார் முகத்துவாரம் வரை 6 கி.மீ., துாரத்திற்கு, பகிங்ஹாம் கால்வாய் உள்ளது.

சில ஆண்டுகளாக, வெள்ளபெருக்கு ஏற்படும்போது, பகிங்ஹாமில் இருந்து வெளியேறும் வெள்ளநீரால் வடசென்னை பகுதிகளை கடுமையாக பாதிக்கின்றன.

குறிப்பாக, 2023ல், வெள்ளநீருடன் எண்ணெய் கழிவுகளும் ஊருக்குள் புகுந்ததால், பல வீடுகள், உடைமைகள் மற்றும் மீனவர்களின் படகு, வலைகள் சேதமாகின.

பின், பகிங்ஹாம் கால்வாயில் இருந்த எண்ணெய் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், பகிங்ஹாம் கால்வாயில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலில், ரசாயனம் மற்றும் எண்ணெய் கழிவுகள் கலப்பது தொடர்கிறது.

இந்த நிலையில், நேற்று கார்கில் நகர் அருகே பகிங்ஹாம் கால்வாயில் ரசாயனம் மற்றும் எண்ணெய் கழிவுகளும் பல அடி துாரம் போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது. அதேநேரம் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளால் நீரோட்டம் தடைபட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உடனடியாக நீர்வளத்துறை, மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement