வெள்ளக்காடானது மங்களூரு: ஏழு பேர் பலி

1



மங்களூரு : கர்நாடகாவில் பெய்த கனமழையால், மங்களூரு நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகளுக்கு ஏழு பேர் பலியாகி உள்ளனர்.


கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மங்களூரு நகரில் மழை கொட்டித்தீர்த்தது.


மொந்தேபதவுகொடி என்ற இடத்தில் மண் சரிந்து, வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டிற்குள் இருந்த 3 மற்றும் 2 வயது குழந்தைகள் உட்பட ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

Latest Tamil News
கனமழை பெய்து கொண்டு இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டது, பக்கத்து வீட்டினருக்குக்கூட தெரியவில்லை. நேற்று காலை எழுந்து பார்த்தபோது தான், நிலச்சரிவில் வீடு இடிந்தது தெரிந்தது.


தகவல் அறிந்ததும் தட்சிண கன்னடா மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று மீட்டனர்.


இதில் மூதாட்டி ஒருவரும், அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் உயிரிழந்தனர். பெல்லுகிராமா கிராமத்தில் மண் சரிந்ததால், வீட்டின் கூரை இடிந்து 10 வயது சிறுமி உயிரிழந்தார்.


எச்சரிக்கையை மீறி கடலுக்குள் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் இருவர், கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.


மழை பெய்தபோது, மின்மாற்றியில் பழுதை நீக்கிக் கொண்டு இருந்த மின்வாரிய ஊழியர் ஒருவரும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
Latest Tamil News

கொட்டித் தீர்த்த கனமழையால் மங்களூரு நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது; 100க்கும்
மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.


மங்களூரில் இருந்து கேரளாவின் சொர்ணுார் செல்லும் ரயில் பாதையில், மரமிகட்டே என்ற இடத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து, தண்டவாளம் மீது விழுந்தது.


அந்த நேரத்தில் ரயில் வராததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. கனமழை எதிரொலியாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அங்கன்வாடிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.


நேற்று முன்தினம் காலை 8:30 மணியில் இருந்து, நேற்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக மங்களூரின் கோட்டேகாருவில் 31.3 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement