கட்டுமான 'கியூரிங்' பணியில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் வழிமுறைகள்

கலவை தயார் செய்யும் அளவுக்கு, அதிகமாக இல்லாமல் தேவையான அளவு மட்டுமே தண்ணீர் சேர்க்க வேண்டும். கியூரிங் செய்வதும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்கிறார், 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன்.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...

'புட்டிங் கான்கிரீட்' அமைத்த பின், திரும்பவும் மண் நிரப்புவதற்கு முன், ஏழு நாட்கள் கட்டாயம் கியூரிங் செய்ய வேண்டும். செங்கல் சுவர், பிளை ஆஷ் சுவர் ஆகியவற்றிற்கு குறைந்தது ஏழு நாட்கள் வரை, கியூரிங் செய்ய வேண்டும்.

அதன் பின், சுவர் பூசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், கியூரிங் செய்ய வேண்டும். காலம், பீம், பூச்சு போன்றவற்றிற்கு, 14 நாட்கள் கியூரிங் செய்ய வேண்டும். ரூப் சிலாப் கான்கிரீட்டிற்கு குறைந்தது, 14 முதல், 28 நாட்கள் வரை, கியூரிங் செய்ய வேண்டும்.

சணல் சாக்கு கொண்டு சுற்றி கட்டி காலம், பீம் ஆகியவை கியூரிங் செய்யலாம். மின் மோட்டார் பயன்படுத்தி குழாய் வாயிலாக கியூரிங் செய்வதால், அதிக தண்ணீர் வீணாகும் வாய்ப்புள்ளது.

இத்தண்ணீர், மெட்டல் கான்கிரீட் வழியாக நாம் ஏற்கனவே செட்டில் செய்த மண்ணில் இறங்கி பாதிப்பை ஏற்படுத்தும்.

முதல் தளமாக இருப்பின், முதல் தள கான்கிரீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீர் வீணாவதைத் தவிர்க்க தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் செய்வது போல கட்டடத்தில் அந்த முறையை பயன்படுத்தலாம்.

சுவர் கட்டுமானம் மற்றும் சுவர் பூச்சிற்கு கியூரிங் செய்யும் பொழுது 'வாட்டர் ஸ்பிரே' செய்யும் வகையில் அமைப்பை ஏற்படுத்தி, கியூரிங் செய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம். கட்டடத்தின் உட்புற பூச்சுக்கு ஜிப்சம் பூச்சையும், வெளிப்புறம் சிலிகான் சாண்ட் ரெடிமிக்ஸ் பூச்சும் பயன்படுத்தலாம்.

சிலிகான் சாண்ட் ரெடிமிக்ஸ் பூச்சுக்கு, மூன்று நாட்கள் கியூரிங் செய்தால் போதுமானது. நாம் தண்ணீர் தொட்டி கட்டும் பொழுது, கூடுதலாக மழை நீரை சேகரிக்கவும் ஒரு தொட்டியை கட்டிக்கொள்ள வேண்டும்; தண்ணீர் பற்றாக்குறை சமயத்தில் பயன்படுத்தலாம். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கும், ஒப்படைத்தல் நம் கடமையாகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement