வருவாய்த்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்; குறைதீர் கூட்டத்தில் விவசாயி குமுறல்
சேலம்: ''வாழப்பாடி வருவாய்த்துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது,'' என, வாழப்பாடி விவசாயி பெரியசாமி, குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
கெங்கவல்லி வெங்கடாஜலம்: மாவட்டத்தில் தற்போது பரவலாக நெல், மக்காச்சோளம் அறுவடை தொடங்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களில், 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட உலர் களங்கள் தான் உள்ளன. அவை பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி பயன்படுத்த முடியாததால், சாலைகளில் பயிர்களை காய வைக்கும் நிலை உள்ளது.
மாவட்டம் முழுதும் உள்ள உலர் களங்களை கணக்கெடுத்து பராமரிப்பு பணி செய்து விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
வாழப்பாடி பெரியசாமி: வாழப்பாடி, சிங்கிபுரத்தில் அரசு புறம்போக்கு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஏரி, குட்டைகளில் மண் அள்ளி விற்கப்படுகிறது.
கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு, பெருமாள் மலையில் ஆக்கிரமித்துள்ள இடங்களை தேர்வு செய்து ரசீது வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வாழப்பாடி வருவாய்த்துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
தலைவாசல் கோவிந்தன்: ஆசியாவில் பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம், எங்கள் பகுதியில் உள்ளது. ஆனால் இரவில் அவசர சிகிச்சை செய்யப்படுவதில்லை. கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அபிநவம் ஜெயராமன்: மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்கறி, பழங்கள் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இடைப்பாடி ராஜன்: காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இதை தடுக்க, வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
அம்மாபேட்டை ராஜவேல்: நாமமலை, குமரகிரி மலையில் இருந்து வழியும் மழைநீர், குமரகிரி ஏரிக்கு செல்லும் பாதையை, ஏரி சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக கான்கிரீட் சுவர் கட்டி அடைத்துவிட்டனர். இதனால் வயல்களுக்குள் மழைநீர் புகுந்து தேங்கி, பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து வேளாண், கால்நடை, தோட்டக்கலைத்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி