வாய்க்கால் வழித்தடத்தில் ஆளை விழுங்கும் பள்ளம்

பல்லடம் : பல்லடம் அருகே, பி.ஏ.பி., வாய்க்கால் வழித்தடத்தில் உள்ள ஆளை விழுங்கும் பள்ளத்தால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பல்லடம், - மங்கலம் ரோடு, வேலம்பாளையம் அருகே, பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலை ஒட்டி உள்ள மண் தடம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகருக்கு செல்கிறது.

20 அடி அகலம் கொண்ட இந்த மண் தடத்தின் ஒரு பகுதி சிறிது சிறிதாக சுருங்கி வருகிறது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'மங்கலம் ரோட்டில் இருந்து ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் செல்லும் பி.ஏ.பி., வாய்க்கால் வழித்தடம் வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வழித்தடத்தின் ஒரு பகுதி வலுவிழந்து உள்ளது. இவ்வழியாக சென்ற லாரி மற்றும் டூவீலர் ஆகியவை சமீபத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தற்போது இந்த மண் வழித்தடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

விபத்து ஏற்படும் முன், வாய்க்கால் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement