சத்தத்தை விரும்பாத வள்ளல் ஹனுமன்

பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனி சிறப்புகள், வழிபாடுகள் இருக்கும். இவற்றை பக்தர்கள் தவறாமல் பின்பற்றுவர். அதேபோன்று பெலகாவியில் கிராமம் ஒன்றில் குடிகொண்டுள்ள ஹனுமனுக்கு சத்தமே பிடிக்காது.

பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் அவரகேடா கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் ஹனுமன் குடிகொண்டுள்ளார். இது, 500 ஆண்டுகள் வரலாறு கொண்டுள்ளது. புவா மஹாராஜா, கிருஷ்ணா ஒருநாள் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஹனுமர் சிலை கிடைத்தது. இதை ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டி வழிபட துவங்கினார்.

வரங்கள்



அன்று முதல் பக்தர்களுக்கு ஹனுமன் காமதேனுவாக திகழ்கிறார். வாழ்க்கையில் கஷ்டங்களால் நொந்து, அபயம் கேட்டு தன் காலடியில் சரண் அடைந்தவர்களுக்கு வரங்களை அள்ளித்தருவதில் வள்ளல். ஹனுமனின் சக்தியை பற்றி கேள்விப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஹனுமனை தரிசனம் செய்து பலன் அடைகின்றனர்.

ஆனால் இங்கு குடிகொண்டுள்ள ஹனுமனுக்கு சத்தம் ஆகாது. அவர் தெற்கு முகமாக அமர்ந்து தவம் செய்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர். எனவே இந்த ஊரில் யாரும் சத்தம் செய்ய மாட்டார்கள்; மைக் வைத்து பேசமாட்டார்கள். ஊரில் எங்கு தேடினாலும் மாவு அரைக்கும் ஆலைகளை பார்க்க முடியாது. இயந்திரங்கள் ஓடினால் சத்தம் வரும். இது ஹனுமனின் தவத்துக்கு இடையூறு ஏற்படும். அவரது கோபத்துக்கு ஆளாவோம் என்ற பயத்தால், மாவு மில்லுக்கு அனுமதி இல்லை.

எந்த வீடுகளில் திருமணம் நடந்தாலும், மேள சத்தம் கேட்காது. சத்தமில்லாமல் திருமணம் நடக்கும். திருவிழாக்களிலும் கூட மைக், ஒலிப்பெருக்கி, ஆரவாரத்தை கேட்க முடியாது. நிசப்தமாக இருக்கும்.

அனுமதி இல்லை



இந்த கிராமத்தில் தச்சு வேலை செய்வோர், கொல்லர், செருப்பு தைப்போருக்கு அனுமதி இல்லை. இந்த வேலைகளை சத்தம் இல்லாமல் செய்ய முடியாது. எனவே இவர்களுக்கு கிராமத்தில் அனுமதி இல்லை. இவர்கள் வேறு ஊருக்கு பிழைக்க சென்று விட்டனர்.

சிலர் கடவுளின் கட்டளையை மீறி, தச்சு வேலை, செருப்பு தைக்கும் தொழிலை துவக்கினர். ஆனால் தொழில் நடக்காமல் தஷ்டம் ஏற்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினரும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். ஊரிலும் அசம்பாவிங்கள் நடந்தன. எனவே அன்று முதல், யாரும் சத்தம் செய்வதில்லை. கிராமமே அமைதியாக இருக்கும்.

ஹனுமனை தரிசனம் செய்தால், வாழ்க்கை வளமாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பங்களில் கஷ்டம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளதால், ஆற்றங்கரை ஹனுமன் என, பக்தர்கள் அழைக்கின்றனர்


.நமது நிருபர் -

Advertisement