சொர்ணபுரீஸ்வரர் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, சாலவாக்கம் கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சிவராத்திரி, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் பக்தர்கள் நீராடி, பின், இறைவனை வழிபட்டு வந்தனர். தற்போது, குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

குளத்தின் கரையில் உள்ள படிக்கட்டுகள் சரிந்தும், செடிகள் வளர்ந்தும் உள்ளன. இதனால், பக்தர்கள் கோவில் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும், குளத்தில் வளர்ந்துள்ள செடிகளில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோவில் குளத்தின் நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்து உள்ளது.

எனவே, கோவில் குளத்தை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement