மின் மயானம் செயல்படாததால் உடல்களை தகனம் செய்ய முடியவில்லை; மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

மேட்டுப்பாளையம்; மின் மயானம் செயல்படாததால் உடல்களை தகனம் செய்ய முடியவில்லை என்று மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அதிகாரிகளை கண்டித்து பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
கோவை மாவட்டம் காரமடை நகர மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் உஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. கமிஷனர் மதுமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் காரசார விவாதம் செய்தனர். அப்போது கவுன்சிலர்கள் பேசியதாவது:-
பிரியா (மா. கம்யூ.,)-- 3 மாதம் காலமாக மின் மயானம் செயல்படவில்லை. காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை.
விக்னேஷ் (பா.ஜ.,)---மன்ற கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடப்பதால் மாதம் மாதம் பேச வேண்டிய மக்கள் பிரச்சனைகளை பேச முடியவில்லை. மின் மயானம் செயல்படாததால் காரமடையில் இறப்பவர்களை, மேட்டுப்பாளையம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. காரமடை நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் துப்பரவு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது. நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. 3 மாதத்திற்கு ரூ.32 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஆனாலும் கொசு மருந்து அடிப்பதில்லை. அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.
தலைவர் உஷா:- இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
வனிதா (அ.தி.மு.க.)--மின் மயானம் பிரச்னையால் மக்கள் பிணத்தை தூக்கி கொண்டு அலைகின்றனர். இனி காரமடையில் இறப்பவர்களின் உடலை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வருவோம். குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.வேண்டியவர்களுக்கு முதலில் தரப்படுகிறது.
தியாகராஜன் (தி.மு.க.)--2,500 தெருவிளக்குகள் பராமரிப்புக்கு 3 பேர் தான் பணியில் உள்ளனர். கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டும். கொசு மருந்துகளை முறையாக அடிக்க வேண்டும். 7 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அமுதவேணி (தி.மு.க)--குடிநீர் சேறு கலந்து வருகிறது. ரொம்ப மோசமாக வரும் தண்ணீரால் மக்கள் அவதியடைகின்றனர். குடிநீர் விநியோகத்தில் தாமதம் உள்ளது. இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.-----