பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்; ரயில் பயணிகள் நல சங்கம் வலியுறுத்தல்

1

பெ.நா.பாளையம்; கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.

துடியலூர் ரயில் நிலைய வளாகத்தில், கோவை, மேட்டுப்பாளையம் ரயில் பயணிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், புதிதாக பொறுப்பேற்றுள்ள செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பங்கேற்ற ரயில் பயணிகள் தற்போது நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில், துடியலூர் ரயில் நிலையத்தை ஒட்டி கிழக்கு பக்கமாக உள்ள ரோட்டை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில், தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

வீரபாண்டி பிரிவு, கோட்டை பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ளது போல புதுப்பாளையம், இடிகரையை பிரிக்கும் ரயில் தண்டவாளத்துக்கு கீழே தார் ரோடு அமைக்க, ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி ரயில் தண்டவாளத்துக்கு கீழ் பகுதியில் மெட்டல் ரோடு அமைக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம்--காரமடை இடையே டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும். இதே போல ஏற்கனவே ரயில் நிலையங்கள் இயங்கி வந்த வீரபாண்டி, புதுப்பாளையம், உருமாண்டம் பாளையம் ஆகிய இடங்களில் மீண்டும் ரயில் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, கோவை மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பாசஞ்சர் ரயிலில் எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ளன. பயணிகள் நெரிசலை தவிர்க்க, இதனுடன் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைத்து, 12 பெட்டிகளாக அதிகரிக்க வேண்டும். இதற்கு ஏற்ப பிளாட்பார்ம் விரிவுபடுத்த வேண்டும்.

துடியலூர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகன ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். தண்ணீர் வசதி இல்லாததால் ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறை, துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பயன்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் வரை இயங்கி வந்த, 4ம் நம்பர் பஸ்களை மீண்டும் பழையபடி இயக்க, போக்குவரத்து துறை முன்வர வேண்டும்.

துடியலூர் ரயில் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, 'சிசிடிவி' பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Advertisement