பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்: இமாச்சல பிரதேச அரசு அறிவுறுத்தல்

சிம்லா: கொரோனா பரவல் எதிரொலியாக பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இமாச்சல பிரதேச அரசு அறிவுறுத்தி உள்ளது.



நாடு முழுவதும் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. தினமும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 4307 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந் நிலையில், பொது இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு;


மூத்த குடிமக்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில், மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.


கூட்டமாக அல்லது அதிகம் பேர் நடமாடும் இடங்களில் தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும்.


இவ்வாறு சுகாதாரத்துறை கூறி உள்ளது.


அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement