நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி

23


சண்டிகர்: அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி உள்ளார். பணம் வந்த பாதை, எங்கிருந்து வந்தது, பின்னணியில் யார் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: டில்லியில், மார்ச் மாத மத்தியில் நீதிபதியின் வீட்டில் வேதனையான சம்பவம் நடந்தது. கறைபடிந்த, கணக்கில் வராத, சட்டவிரோதமான மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 6 -7 நாட்களாக அந்த விஷயம் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாமல் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். அமைப்புகளில் இருந்து, கறைபடிந்த, கணக்கில் வராத மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் கைப்பற்றப்படும் போது, அது யாருடையது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

பணம் வந்த பாதை என்ன?

எங்கு இருந்து வந்தது?

பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரும் உள்ளனரா?

நீதித்துறை அல்லது நீதித்துறைப் பணிகளில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதா?

இந்த பிரச்னைகள் அனைத்தும் வழக்கறிஞர்களை மட்டும் அல்ல சாமானிய மக்களையும் கோபமடைய வைத்து உள்ளது.



ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? விசாரணை ஏன் நடத்தப்படவில்லை? என கேள்வி எழுகிறது.
ஒரு ஜனநாயகத்தில் சிலர் மட்டும் விசாரணை மற்றும் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் கடுமையாக சமரசம் செய்யப்படுகின்றன.


இரண்டு மாநிலங்களின் நீதித்துறையை உள்ளடக்கிய ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி, நீதித்துறை பணியைச் சார்ந்து, நிர்வாக பணியையும் செய்கிறார். இந்த நிர்வாகப் பணி மிகப்பெரியது.

இதற்கு நீதிபதிகளுக்கான குழு அனுமதி வழங்கி உள்ளதா?

அதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா?

அதன் அறிக்கை ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?

அந்த அறிக்கையை செயல்படுத்த முடியுமா?

ஒரு நீதிபதியை நீக்கும் வழிமுறை இருந்தால், அதனை லோக்சபா அல்லது ராஜ்யசபாவில் தான் துவங்க முடியும் என அரசியலமைப்பு கூறுகிறது. இது தான் ஒரே வழியா? அப்படியென்றால், நீதிபதிகள் குழுவானது, எப்ஐஆர்.,க்கு மாற்றாக இருக்க முடியாது.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது நாம் உரிமை கோரியிருந்தால் சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும். ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் கூட பதவியில் இருக்கும் வரை வழக்கு தொடர்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாருக்கும் இந்த சலுகை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement