தி.மு.க., எண்ணம் கானல் நீராகும்: உறுதியுடன் சொல்கிறார் இ.பி.எஸ்.,

சென்னை:எதிர்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவதன் மூலம் தி.மு.க., ஆட்சியின் மாய பிம்பத்தை தக்க வைக்கும் எண்ணம் கானல் நீராகும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.

அவரது அறிக்கை:

தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை தலைமையேற்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னிலை வகித்த மாவட்டக் கழகச் செயலாளர் அசோக் உள்ளிட்ட நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கைது செய்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

காவல்துறையிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகு, மேடை அமைத்த பிற்பாடு இடத்தை காவல்துறை மாற்றச் சொல்ல, அதற்கும் ஒப்புக்கொண்டு இடத்தை மாற்றி அ.தி.மு.க., நடத்திய மக்களுக்கான ஒரு போராட்டத்தை அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்?

எதிர்க்கட்சிகளோ, மக்கள் அமைப்புகளோ போராடவே கூடாது என முழுவதுமாக ஒடுக்கக் கூடிய ஒரு அரசை பாசிச மாடல் அரசு என்று சொல்லாமல், வேறென்ன சொல்வது?

வெற்று விளம்பரங்களாலும், எதிர்க்குரல்களை ஒடுக்குவதாலும் தங்கள் ஆட்சி மீதான மாய பிம்பத்தை தக்க வைக்க தி.மு.க., நினைத்தால், அந்த எண்ணம் கானல் நீராய்ப் போவதை 2026 தேர்தல் காட்டும்!

மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரல்! அதை ஒடுக்கும் ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள். இது உறுதி!

இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement