பியுஸ் சாவ்லா ஓய்வு: கிரிக்கெட்டில் இருந்து

புதுடில்லி: இந்தியாவின் பியுஸ் சாவ்லா, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா 36. உ.பி.,யில் பிறந்த இவர், சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டராக' விளையாடினார். சேலஞ்சர் டிராபியில் (2005-06) இந்தியா 'பி' அணிக்காக பங்கேற்ற இவர், இந்தியா சீனியர் அணியின் சச்சின், யுவராஜ் சிங், தோனியை அவுட்டாக்கினார். இதனையடுத்து, தனது 17வது வயதில் முதல் தர போட்டியில் அறிமுகமானார். கடந்த 2006ல் மொகாலி டெஸ்டில் (எதிர்: இங்கிலாந்து) அறிமுகமானார். அதன்பின் ஒருநாள் (2007), சர்வதேச 'டி-20'ல் (2010) முதன்முறையாக விளையாடினார்.

இதுவரை 3 டெஸ்ட் (6 விக்கெட்), 25 ஒருநாள் (32 விக்கெட்), 7 சர்வதேச 'டி-20'ல் (4 விக்கெட்) விளையாடிய சாவ்லா, உலக கோப்பை (2007ல் 'டி-20', 2011ல் 50 ஓவர்) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். முதல்தரம் (446 விக்கெட், 137 போட்டி), 'லிஸ்ட் ஏ' (254 விக்கெட், 164 போட்டி), 'டி-20' (319 விக்கெட், 297 போட்டி) அரங்கில், 598 போட்டியில், 1019 விக்கெட் சாய்த்துள்ளார்.

பிரிமியர் லீக் அரங்கில் 2014ல் சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணியில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து சாவ்லா கூறுகையில், ''இருபது ஆண்டுகளுக்கு மேலாக விளையாடிய கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. இந்நாள், எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான நாள்'' என்றார்.

Advertisement