செஞ்சி வார சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

செஞ்சி : செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வார சந்தை நடந்து வருகின்றது. நேற்று நடந்த சந்தை பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு சந்தையாக நடந்தது.

வழக்கமாக சிறப்பு சந்தைக்கு, தர்மபுரி, வேலுார், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமன விவசாயிகள், ஆடு வியாபாரிகளும் ஆடுகளை கொண்டு வருவர். இந்த முறை போளூர், அவலுார்பேட்டை, தீவனுார், உளுந்துார்பேட்டை உட்பட பல்வேறு ஊர்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு சந்தை நடந்து முடிந்து விட்டது.

இதனால் நேற்று ஆடு வாங்க வெளியூர் வியாபாரிகள் மிக குறைவாக வந்திருந்தனர். உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் குர்பானி கொடுப்பதற்காக ஆடு வாங்க வந்திருந்தனர்.

வெளியூர் வியாபாரிகள் குறைவாக வந்ததால் வியாபாரத்தில் போட்டி குறைந்து மந்த நிலை நிலவியது. கடந்த வாரம் காலை 3:00 மணிக்கு துவங்கி காலை 6:00 மணிக்கு அனைத்து ஆடுகளும் விற்று தீர்ந்த நிலையில், நேற்று 3:00 மணிக்கு துவங்கிய சந்தை காலை 9:00 மணி வரை நீடித்தது.

அத்துடன் எதிர்பார்த்த விலையும் கிடைக்காததால் குறைவாக போனதால் வெளியூர் இருந்து ஆடு கொண்டு வந்திருந்த விவசாயிகளும் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.



Advertisement