தறிகெட்டு ஓடிய சரக்கு வாகனம்; கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு மூவர் காயம்; சிறுவன் உட்பட மூன்று பேர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுவன் ஓட்டிய சரக்கு வாகனம் அரிசி கடைக்குள் புகுந்தது. மூவர் காயமடைந்தனர்.
புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள அரிசி கடைக்கு நேற்று காலை சரக்கு வாகனத்தில் டிரைவர் ஒருவர், அரிசி மூட்டைகளை எடுத்து செல்ல வந்தார்.
அவருடன் சரக்குகளை வாகனத்தில் ஏற்றுவதற்கு 17 வயது சிறுவன் ஒருவரும் வந்துள்ளார். டிரைவர் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு சென்றார்.
அப்போது, சரக்கு வாகனத்தில் லோடு ஏற்ற வந்த சிறுவன் மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டுள்ளது. இதனால் சிறுவன் வாகனத்தை இயக்கியுள்ளார்.
ஆக்சிலேட்டரை சிறுவன் வேகமாக அழுத்தியதால், கட்டுப்படுத்த முடியாமல் வேன் திடீரென அரிசி கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் வெளியே இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டிருந்த முனுசாமி, 45; என்பவரின் காலில், சரக்கு வாகனம் ஏறியது. மேலும் சாலையில் நடந்து சென்ற ராஜேந்திரன், 60; கடையின் உரிமையாளரான பெருமாள் ஆகியோரும் காயமடைந்தனர்.
அக்கம், பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்த புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார் வாகனத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
மூன்று பேர் கைது
இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து, வேலுாரை சேர்ந்த வேன் டிரைவர் வேல்முருகன் மகன் பூபதி, 23; வாகன உரிமையாளர் கிருஷ்ணன் மகன் சஞ்சய், 20; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
அதிகாரிகள் சுணக்கம்
நகரப்பகுதிகளில் பள்ளி சிறுவர்கள் பைக் ஓட்டிச்செல்வது சாதாரணமாகி விட்டது. லைசன்ஸ் பெற்று தராமல் சிறுவர்களுக்கு பெற்றோர்களே வாகனங்களை வாங்கி கொடுக்கின்றனர். நகரப் பகுதிகளில் அவர்கள், வாகனத்தை அசுர வேகத்தில் இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
சாலையில் இறங்கி வாகன தணிக்கை செய்ய வேண்டிய ஆர்.டி.ஓ., மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அறையில் அமர்ந்து காற்று வாங்குகின்றனர். இதே நிலை நீடித்தால் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் சாலையில் இறங்கி கடமையை செய்ய வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை