கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி  

கடலுார்: கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.

அவரது செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி மையங்களில் மொபைல் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கரவாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் கட்டணமின்றி 18 முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதியாக குறைந்தது 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 8ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற இயக்குநர், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 68, சங்கர நாயுடு தெரு, தானம் நகர், திருப்பாதிரிப்புலியூர், கடலுார்- 607002 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement