தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் கனவு நனவாகுமா? வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்

உடுமலை; 'விலை வீழ்ச்சி காலங்களில், ரோட்டோரத்தில் தக்காளியை கொட்டும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஜாம் தொழிற்சாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டுதலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்,' என, தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.
ஆண்டு முழுவதும், சராசரியாக, 20 ஆயிரம் ெஹக்டேர் வரை இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், வீரிய ரக நாற்றுகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால், சாகுபடியில், விளைச்சல், பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, பரவலாக பெய்தது.
இதையடுத்து, விவசாயிகள் வழக்கத்தை விட கூடுதல் பரப்பில், தக்காளி சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. சில மாதங்களில், தேவையை விட வரத்து அதிகரிக்கும் போது, தக்காளிக்கு விலை கிடைக்காது.
அப்போது, சந்தையில் ஏலம் போகாத பல ஆயிரம் டன் தக்காளியை ரோட்டோரங்களில் விவசாயிகள் கொட்டும் நிலை ஏற்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்னை தொடர்கதையாகவே உள்ளது. செம்மண் விளைநிலங்கள் மற்றும் சொட்டு நீர் பாசனத்தில், தக்காளியை மட்டுமே சாகுபடி செய்ய வேண்டியுள்ளதால், மாற்றுச்சாகுபடிக்கும் விவசாயிகள் செல்ல முடிவதில்லை.
பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தமிழக அரசு உதவ வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
ஜாம் தொழிற்சாலை வேண்டும்
தக்காளியில், ஜாம் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உடுமலையில் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் அமைச்சகத்தின் தஞ்சை இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தின் சார்பில், தக்காளி மதிப்பு கூட்டு வாகனம் வாயிலாக உடுமலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அந்த வாகனத்தில், தக்காளியை மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறிய இயந்திரங்கள் இருந்தது. நடமாடும் வாகனத்தில், தக்காளி கூழ், பேஸ்ட் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
ஆயிரம் கிலோ தக்காளிக்கு, 300 கிலோ கூழ் கிடைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தனர். பரிசோதனை அடிப்படையில் மட்டும் இந்த வாகனம் இயக்கப்பட்டது.
இத்தகைய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தொழிற்சாலையை விவசாயிகளே செயல்படுத்தும் வகையில், தக்காளி உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்கி, தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்.
அல்லது தேர்தலுக்கு தேர்தல், தக்காளி 'ஜாம்' தொழிற்சாலையை உடுமலையில் துவக்குவோம் என வாக்குறுதி கொடுக்கும் அரசியல் கட்சியினர், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வாக்குறுதியை மறக்காமல், செயல்படுத்த வேண்டும் எனவும் மூன்று வட்டார தக்காளி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
'பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன்' விஜய் மல்லையா புது தகவல்
-
உக்ரைனுக்கு பதிலடி: 400 ட்ரோன், 40 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: குஜராத்தில் காங்., தலைவர் கைது
-
ரூ.45 லட்சம் வெகுமதி: இருமாநிலங்கள் தேடிய இன்னொரு நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை
-
இந்திய ஜோடி ஏமாற்றம்
-
இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி