ஏலச்சீட்டு நடத்தி மோசடி; டி.எஸ்.பி.,யிடம் புகார்

பல்லடம்; -ஏலச்சீட்டு நடத்தி மோசடி நடந்ததாக புகார் அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
பல்லடம், அண்ணா நகரை சேர்ந்த ஒருவர்(பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது), கடந்த, 2021ம் ஆண்டு ஏலச்சீட்டு ஒன்றை நடத்தினார். 21 பேர் ஏலச்சீட்டில் இணைந்தனர். ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டுக்கு குறித்த நேரத்தில் முழுமையாக தவணையை செலுத்தினோம். இறுதியில், சீட்டுத் தொகை பெறுவதற்காக கேட்டபோது, பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தார். எஸ்.பி.,யிடம் புகார் அளித்தோம்.
பல்லடம் ஸ்டேஷனில், கடந்த, 2022ம் ஆண்டு விசாரணை நடந்தது. பணத்தை தந்து விடுவதாக கூறிய அவர், போலீசார் முன்னிலையில் ஒப்புதல் கடிதம் அளித்தார். எட்டு முறை புகார் அளித்தபோதும், தொடர்ந்து, பணத்தை தந்து விடுவதாக கூறி ஒப்புதல் கடிதம் மட்டுமே கொடுத்து ஏமாற்றி வருகிறார். சீட்டுத் தொகை கிடைக்காததால், வாங்கிய கடனுக்காக வட்டி செலுத்தி வருகிறோம். தி.மு.க., உறுப்பினராக அவர் இருப்பதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. சீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.