முன்னாள் நீதிபதி மறைவு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு

சென்னை:மறைந்த முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் உடலை, காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஜனார்த்தனம், 89, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக, 2006 முதல் 2015ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்துள்ளார்.

இவரது பரிந்துரையின்படி, தமிழகத்தில் சிறுபான்மையினர், அருந்ததியர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

சமூக நீதி வரலாற்றில் தன் முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர். அவரது மறைவு சமூக நீதித் துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு. ஜனார்த்தனம், நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில், அவரது இறுதி நிகழ்வு, காவல் துறை மரியாதையுடன் நடத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

சேலத்தில் உள்ள அவரது வீட்டில், முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

Advertisement