நடுரோட்டில் பள்ளி மாணவிக்கு 'பளார்' ராயப்பேட்டை அ.தி.மு.க., நபருக்கு வலை

சென்னை, ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, பிளஸ் 2 மாணவியின் தாய், ஒரு புகார் அளித்தனர்.

அதன் விபரம்:

பிளஸ் 2 பயிலும், என் 17 வயது மகள், டி.டி.கே., சாலை வழியாக வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க., இளைஞர் இளம் பெண்கள் பாசறை, 118வது வட்ட செயலர் சூர்யா, 18, என்பவர் நண்பருடன் சேர்ந்து, என் மகளை வழிமறித்துள்ளார்.

பின், மகளின் முடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அடித்து துன்புறுத்தியதுடன், கத்தி முனையில் காதலிக்க வற்புறுத்தி உள்ளார். காதலிக்கவில்லை என்றால் மகளையும், என்னையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த மகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். என் மகளை தாக்கியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சூர்யாவை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூர்யா, காரில் மதுபாட்டில் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.

Advertisement